நான் பார்த்திருக்கிறேன் கடவுளை, நான் குறிப்பிடுவது "அன்பே வெங்கடாசலம்" கடவுளையல்ல.
மேலும் பத்து நிமிடம் தாமதாமானால், மிகப்பெரிய இழப்பு என்ற தருணத்தில், எட்டாவது நிமிடத்தில் தூர வளைவில் திரும்புமே அந்த வண்டி, அது கடவுள் !
தொடர்ந்து பத்து நாள் அரிசி உணவே உண்ணாமல், பதினொன்றாவது நாள் உண்ணும் அந்த சாதமும் சாம்பாரும், அது கடவுள் !
தொடர்ந்து நான்கு நாள் தண்ணீரே குடிக்காமல், பழச்சாறும் குளிர்பானமுமாய்க் குடித்து விட்டு ஐந்தாம் நாள் குடிக்கும் ஒரு குவளை தண்ணீர், அது கடவுள் !
மணிக்கணக்காய் வராமலிருந்து வெக்கை தாங்க முடியாமல் பச்சைக்குழந்தை அழும்போது திடீரென வந்து காற்றாடியை இயக்கும் அந்த மின்சாரம், அது கடவுள் !
தொடர்ந்து சில மணி நேரங்கள் இசையை ரசித்து விட்டு பின் அதை நிறுத்தியவுடன் நிகழும் சிறு அமைதி, அது கடவுள் !
காதலர்கள் மணிக்கணக்கில் வாய் கிழியப் பேசிக் கொண்டு இருக்கும்போது அவர்கள் இடையில் நிகழும் சில நொடி மெளனம், அது கடவுள் !
நமக்கு உலகிலேயே மிக முக்கியமான மனிதருக்கு, உயிர் காக்கும் உதவி புரிந்த ஒவ்வொன்றும் கடவுள் !
அவ்வளவு ஏன், இதை எழுதிய நானும் சரி படிக்கின்ற நீங்களும் சரி, யாரோ ஒருவருக்கு ஏதோவொரு சமயத்திலாவது கடவுளே !
பி.கு: இதைச் சிறுவரிகளாகவோ, கவித்துவமாகவோ எழுத முயற்சிக்கக்கூட இயலவில்லை. இதை ஒரு (உண்மைக்) கதையாகக் கருதவும். உலகே உணர்ந்தது என்பதால் இதில் தாயைச் சேர்க்கவில்லை.
No comments:
Post a Comment